சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை தருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க அரசாங்கமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஒரு குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க ஒருவர் தயாராக இல்லை என்றால், பாதுகாப்பற்ற முறைகளை நாடுவது அல்லது பிறந்த பிறகு குழந்தையை கைவிடுவது குற்றமாகும்.
கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும். கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும். ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.