வரிகளை அறவிடும் செயல்முறையை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், அதற்கான ஆதரவையும் வழங்குவதற்குப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டி.ஆர்.எஸ்.ஹபுஆராச்சிக்கு குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
கடந்த 13ஆம் திகதி பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு களப்பயணமொன்றை மேற்கொண்டிருந்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டிக்கொடுக்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து, அரசின் வரி வருவாயை அதிகரித்து, வரி செலுத்துவோருக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், வங்கிக் கட்டமைப்பு, இலங்கை சுங்கம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் காணி பதிவு அலுவலகம் ஆகியவற்றுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிக் கோப்புகளைத் திறப்பது தொடர்பான தரவுக் கட்டமைப்பை முறையாகப் பராமரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், வரி செலுத்துவோருக்கு கடிதம் அனுப்புவது போன்ற பாரம்பரிய முறைகளுக்கு பதிலாக, குறுந்தகவல் மூலம் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அறிவிப்பது, கையடக்கத்தொலைபேசி செயலிகளை அறிமுகப்படுத்துவது போன்ற நவீன முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நிலையான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, அதற்குரிய சட்ட மாற்றங்கள் உள்ளிட்ட தற்போது காணப்படும் தடைகள் தொடர்பில் குழுவிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.