உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இவ்வருட முடிவிற்குள் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஆணைக்குழு உறுப்பினர்கள் 22, 23 ஆம் திகதிகளில் அங்குள்ள பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் சாட்சியங்களைத் திரட்டிவருகின்றனர்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகிய மூவரடங்கிய ஆணைக்குழு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை பெருமளவானோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்திருப்பதுடன், ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் உள்ளடங்கலாக ஏனைய ஆணையாளர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தும் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இவ்வருட முடிவிற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள ‘பீச்-பே’ ஹோட்டலில் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் சுமார் 50 முஸ்லிம்கள் முன்னிலையாகி சாட்சியமளித்திருப்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இதற்கு முன்னைய ஆணைக்குழுக்களில் முன்னிலையாகாதவர்களாவர். அதேபோன்று 22 ஆம் திகதி சாட்சியமளித்தவர்கள் பெரும்பாலும் ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில் ஆணைக்குழுவின் இரண்டாம்நாள் அமர்வு இன்று (23) நடைபெறவுள்ள நிலையில், அதிலும் 50 இற்கும் மேற்பட்டோர் சாட்சியமளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.