பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் (MSMEs) பரேட் சட்டத்தின் செயல்பாட்டால் மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளாகப்போகின்றனர். இந்தச் சட்டத்தின் கீழ், கடன் நிலுவை காரணமாக இன்று முதல் அவர்களது சொத்துக்கள் ஏலம் விடப்படும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.
அதனால், அரசாங்கம் உடனடியாக பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, MSME தரப்பினருக்கு கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் மற்றும் பிற நிவாரணங்களை வழங்கவேண்டும் என சஜித் வலியுறுத்தினார்.
இவ்வாறான சூழலில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிக்கும் இந்தத் தொழில்முனைவோர் தரப்பின் பங்களிப்பு கணிசமாகக் குறையும் அபாயம் நிலவுவதாகவும், இதன் விளைவாக நாட்டில் சுமார் 4 மில்லியன் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், முந்தைய அரசாங்கத்தைப் போலவே, தற்போதைய அரசாங்கமும் பொய்கள், தேர்தல் நோக்கிய வாக்குறுதிகள் மூலம் இந்தத் தரப்பினரை ஏமாற்றிவருவதாகவும், நீடித்த தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசாங்கம் இந்த பிரச்சினையிலிருந்து விலக முடியாது எனவும், MSME தொழில்முனைவோர்களுக்கு முறையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.