தொற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பொது சுகாதார பரிசோதகர்களின் சேவைகள் பாராட்டப்பட வேண்டும் எனவும், கடந்த காலங்களில் மக்களின் சுகாதார நல்வாழ்வுக்காக பல்வேறு காத்திரமான பணிகளை மேற்கொண்டனர் எனவும், சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் வகையில் பொது சுகாதார பரிசோதகர்கள் நியமனத்தை துரிதப்படுத்துமாறு உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் பிரதிநிதிகளுடன் இன்று (16) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
175 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிட்டத்தட்ட 4 வருடங்களாக பயிலுநர் டிப்ளோமாவில் இணைத்துக்கொள்ளாதது குறித்து அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்ததோடு, இவ்விடயம் தொடர்பில் குறித்த சந்தர்ப்பத்தில் தீர்வை வழங்கும் முயற்சியின் பயனாக எதிர்க்கட்சித் தலைவர் உரிய துறைசார் அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
மலேரியா நோயினால் ஒரு உயிர் பலியாகியுள்ள இவ்வேளையில், இவ்வாறான தொற்றுநோய்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்த பொது சுகாதார பரிசோதகர்கள் முக்கியமானவர்கள் என்பதனால், அவர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அது தொடர்பான பயிற்சிக்கான வசதிகளை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சுகாதார அமைச்சரிடம் வேண்டிக்கொண்டார்.
அவர்களின் சேவையின் பெறுமதியை குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்த சுகாதார அமைச்சர், இது குறித்து கலந்துரையாட குறித்த தரப்பை தம்மை வந்து சந்திக்குமாறு கோருமாறு சுகாதார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக் கொண்டார்.
இதன் பிரகாரம், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சுகாதார அமைச்சுக்கு சமூகமளிப்பர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை ஏற்றே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.