கல்பிட்டிய பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதே பொலிஸ் நிலைய ஓ.ஐ.சி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் மஜஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
ஆனால் முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியதால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த ஓ.ஐ.சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்னொரு பக்கம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் சேவையில் இருந்தும் அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் குளியாப்பிட்டிய பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், தொடர்ந்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.
முன்னதாக, புத்தளம் நீதவான் நீதிமன்றம் சந்தேகநபருக்கு பிணை வழங்கியதுடன், நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரியை ஓ ஐ சி அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.