அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக மாறுதல், கண்களில் அரிப்பு உணர்வு ஏற்படுதல்… இப்படி பல பிரச்சினைகளை சந்தித்திருப்போம்.
இதை கண் உலர் பாதிப்பு என்கிறார்கள். ஆரம்பத்தில் நடுத்தர வயதினரிடம் தென்பட்ட இந்த பாதிப்பு, இப்போது கல்லூரி, அலுவலகம் செல்லும் இளைஞர்களையும், கணினி அதிகமாக உபயோகிப்பவர்களையும் பாதிக்கிறது.
ஏன் ஏற்படுகிறது?
கண்ணில் உள்ள கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீர் போதுமான அளவு உற்பத்தி ஆகாதது மற்றும் வேகமாக ஆவி ஆவதால் இந்த கண் உலர் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களில் வலியை ஏற்படுத்தும். குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருத்தல், கணினித் திரையை அதிக நேரம் பார்த்தல், மோசமான வெளிச்சம் அல்லது அதிக வெளிச்சம் போன்றவற்றால் கண்களில் ஈரப்பதம் இருக்காது.
இவை மட்டுமின்றி, ஒரு சில மருத்துவக் காரணங்களான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அலர்ஜி மற்றும் முதுமை போன்றவை கூட கண்ணின் வறட்சிக்கு காரணமாக அமையும். இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் இருந்தால் அது உங்கள் கண்களில் வலியை ஏற்படுத்துவதோடு, உங்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பார்வைத் திறனையும் பாதிக்கும்.
தற்காப்பு வழிமுறைகள்
கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும். கண்களைச் சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான திரவங்களை வெளியிடும் லாக்ரிமல் சுரப்பி சரியாக செயல்பட வேண்டுமெனில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தேவையான அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தான் கண்களால் கண்ணீர் மற்றும் எண்ணெய்களை உற்பத்தி செய்ய முடியும். தர்பூசணி, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது கண்கள் வறட்சியாவதை தடுக்கும்.
கண் சிமிட்டுவது
அடிக்கடி கண் சிமிட்டுவதன் மூலம் வறண்ட கண்களை தவிர்க்க முடியும். கணினி திரை மற்றும் டிஜிட்டல் சார்ந்த வேலைகளில் உள்ளவர்கள் கண் சிமிட்டுவது என்பது குறைவாகத் தான் இருக்கும். அதனால், கண் சிமிட்டுவதை ஒழுங்குப்படுத்த வேண்டும். ஒருவர் நிமிடத்திற்கு 15 முதல் 30 முறை கண்களை சிமிட்ட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அதேபோல், டிஜிட்டல் திரை போன்றவற்றால் ஏற்படும் கண் அழுத்தத்தை சமாளிக்க அதற்குரிய கண்ணாடிகளை அணிந்து கொள்ளவும்.