நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் தற்போது கொத்மலை பிராந்திய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சில உடல்கள் பேருந்தின் கீழ் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்பதற்கு பொலிஸார் மற்றும் உள்ளூர் மக்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கொத்மலை பொலிஸார் சந்தேகித்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இதுபோன்ற விபத்துக்களை குறைப்பதற்கு ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.