கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, முன்விசாரணை ஆலோசனைக்காக ஜூன் 27, 2025 அன்று அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி கோரிய சில ஆவணங்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசு தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சில ஆவணங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் எனவும், பிரதிவாதிகள் கோரும் மற்ற ஆவணங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகளின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, முன்விசாரணை ஆலோசனைக்காக இவ்வழக்கு ஜூன் 27, 2025 அன்று மீண்டும் அழைக்கப்பட உத்தரவிடப்பட்டது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.