உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை.
இதனால் டொனால்டு டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதின் மீது விரக்தியில் உள்ளார். ரஷ்யாவுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அந்த காலக்கெடுவுக்குள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில், கடுமையான தடைவிதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த போதிலும், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் இராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.
செர்னிவ் பிராந்தியத்தில் ஹோன்சரிவ்ஸ்கே அருகே உள்ள உக்ரைனின் 196ஆவது பயிற்சி மையத்தில் இரண்டு இஸ்கந்தர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளளது.
இதற்கிடையே 78 டிரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஜெட்-பவர்டு (jet-powered) டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.