ஞாபக மறதி அல்லது நினைவாற்றல் இழப்பு என்பது ஆங்கிலத்தில் ‘அம்னீசியா’ என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்பட முக்கிய காரணங்கள்:-
1) ஸ்ட்ரோக் (பக்கவாதம்): இதில் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதால் நினைவாற்றலுக்கு பொறுப்பான பகுதிகளில் சேதம் உண்டாகி ஞாபக மறதி ஏற்படுகிறது,
2) மூளைக்கு அதிர்ச்சியை உண்டாக்கும் மூளை காயங்கள் அல்லது விபத்துக்கள்,
3) மூளையில் ஏற்படும் நோய் தொற்று,
4) நீரிழிவு நோய்,
5) சில மருந்துகளின் பக்க விளைவுகள்,
6) நீண்ட காலமாக மது அருந்தும் பழக்கம்,
7) வளர்ச்சிதை மாற்றம் நோய்க்குறி,
8) தைராய்டு சுரப்பி குறைபாடு,
9) மன அழுத்தம்
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அதிகமாகும் போது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தை குறைத்து நரம்பணுக்களில் சேதத்தை உண்டாக்கி நினைவாற்றலை குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதால் மூளையில் உள்ள நரம்பு செல்களில் உள்ள இன்சுலின் ஏற்பிகள் (ரிசெப்டர்) தூண்டப்படுவது குறைந்து ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சர்க்கரை நோயாளிகளில் சிலருக்கு இன்சுலின் எதிர்மறை நிலையால் மூளையில் அமிலாய்டு புரதங்களின் பிளேக்குகள் அதிகமாகி ஞாபக மறதி ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு பெரும்பாலும் சமீபத்திய நிகழ்வுகள் அல்லது தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் நினைவாற்றலை மேம்படுத்த மருத்துவரை கலந்தாலோசித்து அதற்குரிய மருந்துகளை உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் ஞாபக மறதி பிரச்சினை வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:-
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தை பின்பற்றவும். குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், வால்நட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ளவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் குறைந்த பட்சம் 6 மணி நேரமாவது தூங்குங்கள். மன அழுத்தத்தை குறைத்து கொள்ளுங்கள்.