உலகளவில், குறிப்பாக இந்தியாவில், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆகியவை வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030க்குள் உலகில் உடல் பருமனாக இருக்கும் பத்து குழந்தைகளில் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது.
இது பெரும்பாலும் வயதானோருக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தாலும், இப்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொது சுகாதாரத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்கள் முக்கியமாகின்றன. அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு (HFSS) கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குழந்தைகளின் உடல் பருமன், நீரிழிவுக்கு முதன்மைக் காரணம்.
குளிர்பானங்கள், பேக்கரி உணவு வகைகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் மறைமுக சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி, இன்சுலின் செயல்படும் தன்மையைக் குறைக்கிறது.
இரண்டாவதாக, சக்கை உணவு (ஜங்க் ஃபுட்), பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறிவருகிறது.
மூன்றாவதாக, உடல் ரீதியான செயல்பாடுகள் குறைந்துவிட்டிருப்பது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. குழந்தைகள் வெளியே விளையாடுவதற்குப் பதிலாக கைப்பேசி, டேப்லெட், வீடியோ கேம்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி வகுப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து குழந்தைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கின்றன.
ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் மக்களின் ஆரோக்கியம், குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய அரசாங்கம், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த ‘உணவுக் கொள்கை’ மாதிரியை உருவாக்க வேண்டும்.
இந்தக் கொள்கையின் மூலம், ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பள்ளிகளுக்கு அருகே ஜங்க் ஃபுட் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி வளாகங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் இந்த உணவு வகைகள் கிடைக்காதவாறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
‘சர்க்கரைப் பலகை’ போன்ற முயற்சிகள் நல்ல தொடக்கமாக இருந்தாலும், நீண்ட கால மாற்றத்துக்கு உணவு பழக்கவழக்கங்கள், விளம்பரத் தடைகள், உணவுப் பொருட்களின் விற்பனையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் தேவை.