மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாகனங்கள், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினருக்குச் சொந்தமானவை என பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனங்களில் மொன்டெரோ வகை ஜீப் ஒன்றும், கேரவன் வகை வேன் ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், பண்டாரகம வீதாகம பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒளித்துவைக்கப்பட்டிருந்ததை அடையாளம் கண்டுபிடித்து, பொலிஸார் கைப்பற்றினர்.
அந்த வேனில் பொருத்தப்பட்டிருந்த பதிவு இலக்கம், ஹொரணை மில்லனிய பகுதியில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வாகனத்திற்கு உரியதெனவும், அந்த வாகனம் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஒருவரால் பயன்படுத்தப்பட்டு வந்ததெனவும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட ஜீப்பில் உள்ள பதிவு இலக்கம், மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி முறைமையில் தரவுகளை மாற்றியமைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.