சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, அடுத்த வாரம் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கையை இறுதிப்படுத்தும் முன்னர், இன்னும் சில மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை தயாரிக்கப்பட்டதும், அது பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்படும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாணவர்கள் மற்றும் பிறரிடம் இருந்து மொத்தம் 110 மணி நேரத்துக்கும் அதிகமாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி, பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.