சோதனைக்குட்படாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை குழுவின் அறிக்கை, இன்று (30) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உரையாற்றிய அவர், “அரசாங்கம் இந்த விசாரணை குழுவின் அறிக்கையை இதுவரை மறைத்து வைத்திருந்தது. எனவே அதை நான் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறினார்.
அறிக்கையில், அவதானம் (Alert) வகைப்பாட்டில் சிவப்பு முத்திரையுடன் பதிவு செய்யப்பட்ட 151 கொள்கலன்களில் 37 கொள்கலன்கள் எந்தவொரு கட்டாய சோதனைக்குமில்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன என்றும், அந்தக் கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்பட வேண்டியவை என அதிகாரிகள் முன்னர் குறிப்பிடிருந்த போதும், அவை விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மொத்தமாக 103 கொள்கலன்கள் சோதனையின்றியே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கொள்கலன்களை விடுவிக்க ஜனவரி 18ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்பட்டதாக இருந்தாலும், அதற்குமுன்பாகவே ஜனவரி 17ஆம் திகதி இரண்டு கொள்கலன்கள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
இத்தகவல்கள் அனைத்தும் ஜனாதிபதி நியமித்த அதிகாரப்பூர்வ விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், இது மக்களுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.