தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார் (இனியபாரதி), இன்று (06) காலை திருக்கோவிலில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இக்கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சி. சந்திரகாந்தன்) வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத், 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றபோது கொழும்பில் இருந்து கடத்தப்பட்டு காணாமல் போனார். இந்த சம்பவம் தொடர்பாக தொடரும் விசாரணையின் கீழ், பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் அவரது காரியாலயத்தில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையான் வழங்கிய வாக்குமூலத்தில் வெளியான தகவல்களின்படி, குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று இனியபாரதியின் வீட்டில் இருந்து அவரை கைது செய்து, அம்பாறை நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
2005–2009: காணாமல் போனோருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள்
திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் கடந்த 2005 முதல் 2009 வரை பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்களில், இனியபாரதி மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.