இந்தியா நிதியளிக்கும் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டம் தொடர்பில், இலங்கை குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை பாதுகாப்பு உறுதியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீறல் குறித்த பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கவலைகள் காரணமாக இந்த திட்டம் இதுவரை தாமதமாகி வந்தது.
இந்நிலையில், திட்டத்தை விரைவுப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு தரவு மீறலுக்கும் இடமில்லை என்றும், அதனை முழுமையாக உறுதி செய்யலாம் என்றும் துணை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “அரசியல் நிகழ்ச்சி நிரல் காரணமாக சில பிரிவுகள் திட்டத்தின் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. ஆனால், திட்டத்தின் தரவுப் பாதுகாப்பு அம்சங்கள் கடுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன” எனவும் தெரிவித்தார்.
முகம், கருவிழி, கைரேகை போன்ற உயிர்மதிப்பீட்டு (biometric) தரவுகளை சேகரிக்கக்கூடிய இந்த திட்டத்திற்கு, இந்திய அரசு ரூ. 450 மில்லியன் இந்திய ரூபாய்களை நிதியளித்துள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கையில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரு ஒரே டிஜிட்டல் அடையாளம் வழங்குவதாகும்.