ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்களான ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றஞ்சாட்டி இந்திய மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தது குறித்து பாகிஸ்தானின் ஷஹீட் அப்ரிடி தனது கருத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது;
“.. விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது. அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்?.
முறையான உரையாடலோ அல்லது தொடர்பியலோ இல்லாத போது எப்படி தீர்வு கிடைக்கும்.
இது மாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்துக் கொள்ளதான் நடைபெறுகிறது. ஆனால், எப்போதும் ஒரே ஒரு அழுகிய முட்டை அனைத்தையும் வீணாக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்..”