முன்னாள் பிரதமருடன் அவமரியாதையாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுமளவிற்கு நிதி அமைச்சர் அறிவற்றவராகவுள்ளார், இவ்வாறான ஆணவ போக்குடன் செயற்படும் ஒருவர் நிதி அமைச்சராக இருக்கும் வரை நாடு முன்னேற்றமடையாது.
இந்த ஆணவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வெகு விரைவில் அரசாங்கத்தின் சாதாரண பெரும்பான்மையும் இல்லாமலாக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஆளுந்தரப்பின் 11 பங்காளி கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ள ‘முழு நாடும் சரியான பாதையில்’ என்ற வேலைத்திட்டம் தொடர்பில் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச , ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் மத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து தெளிவுபடுத்தினர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மகாசங்கத்தினர் எமது யோசனையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும். நாட்டை பாரதூரமான முறையில் வீழ்ச்சியடையச் செய்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு முறையில் நாடு இவ்வாறான நிலைமையை அடைவதை தடுப்பதற்கு அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு முயற்சித்தோம்.அதற்கமையவே எமது யோசனைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தினோம்,அதன் பிரதிபலனாக எம்மை வெளியேற்றிவிட்டனர்.
தற்போது இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடிந்த பின்னரே அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளனர்.
அதற்கமைய அமைச்சரவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அது பிரயோசனமற்றதல்லவா? அந்த நிலைமைக்கு நாடு சென்றுள்ளது.
சர்வகட்சி மாநாடு என்பது அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து அனைவரது நிலைப்பாடுகளை கேட்டு அவற்றின் அடிப்படையில் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கையாகும்.
இதன் போது பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை முன்வைத்துக் கொண்டிருந்த முன்னாள் பிரதமருடன் அவமரியாதையாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுமளவிற்கு நிதி அமைச்சர் அறிவற்றவராகவுள்ளார்.
அங்கும் முரண்பாட்டை தோற்றுவிப்பதே அவரது தேவையாகவுள்ளது. இவ்வாறான ஆணவம் கொண்ட ஒருவரை நிதி அமைச்சராகக் கொண்டு நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னேற்ற முடியாது.
இந்த ஆணவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வெகு விரைவில் அரசாங்கத்தின் சாதாரண பெரும்பான்மையும் இல்லாமலாக்கப்படும் என்றார்.