பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்களின் வருகை மேலும் தாமதமடையுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
குறிப்பிட்ட திகதியில் எரிபொருள் விநியோகிப்பதில் உள்ள சிரமம் தொடர்பில் விநியோகஸ்தர்களால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அடுத்த எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்து தரையிறக்கப்படும் வரை, எரிபொருள் விநியோகத்தின் போது பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த வாரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசலும் பெட்ரோலும் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எனவே, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில் எரிபொருள் கப்பல்கள் வரும் திகதியை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் உறுதிப்படுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.