அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக 25 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சி பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கோட்டாகோகமயில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதலும் தாக்குதல் நடத்தப்பட்ட விதமும் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு சர்வதேச சமூகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை, இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும் என தெரிவித்துள்ள லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.