நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர் மின் நிலையத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் இன்று காலை முதல் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.
விமலசுரேந்திர நீர்த்தேக்கம் மற்றும் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக உதவிப் பணிப்பாளர் கூறுகிறார்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் பெய்த கடும் மழைக்காரணமாக பொல்கஹவலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் பெய்த கடும் மழைக்காரணமாக அதன் தாழ் நில பகுதி வாழ் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் கோரியுள்ளார்.
அத்துடன், கடும் மழைக்காரணமாக களனி கங்கை – கித்துல்கல பகுதியிலும், நில்வலா கங்கை – பிட்டபெத்தர பகுதியிலும், மஹாவெளி கங்கை – நாவலப்பிட்டி பகுதியிலும் பெருக்கெடுக்கும் நிலை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஸ்கெலியா – நோட்டன்நோட்டன் – கினிகத்தேன, ஹட்டன் – கினிகத்தேன, ஹட்டன் – கொழும்பு மற்றும் மஸ்கெலியா – ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – பொகவந்தலாவ உள்ளிட்ட பல வீதிகளில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரதத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்த பாதைகளில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெறுவதாக எமதுசெய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளது.