இரு வாகனங்களில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2,030 லீற்றர் பெற்றோலுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்றிரவு (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 48 மற்றும் 33 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, கற்பிட்டி ஆணவாசல துறை பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பெற்றோலும், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் மேற்படி பெற்றோல் இவ்வாறு கற்பிட்டி பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கூலர் வாகனம் ஒன்றில் இருந்து 1470 லீற்றர் பெறோலும், டிமோ ரக பட்டா வாகனத்தில் இருந்து 560 லீற்றர் பெற்றோலும் காணப்பட்டதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெற்றோல் மட்டும் குறித்த பெற்றோலை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.
இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பறிமுதல் செய்யப்பட்ட பெற்றோல் மற்றும் இரண்டு வாகனங்களும் தமது பொறுப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்