பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்கள செயற்பாட்டாளர்களான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர்- வசந்த முதலிகே உட்பட்ட மூவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.
மேலும், பிரியநாத ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டன.
இதன்போது, குறித்த அடிப்படை உரிமைமீறல் மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.