காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே (80) வெற்றி பெற்றுள்ளார்.
சோனியா குடும்பத்தைச் சேராத ஒருவர் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்சிக்குத் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிட்டனர்.
கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கத் தகுதி பெற்ற 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 96 சதவீதத்தினர் வாக்களித்தனர். நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத்தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை, காங்கிரஸ் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அறிவித்தார். கார்கே வரும் 26-ம் திகதி பொறுப்பேற்க உள்ளதாக ரன்தீப் சுர்ஜேவாலா எம்.பி. அறிவித்தார்.