யால சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு!

462

யால சரணாலயத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க வன வளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தீர்மானித்துள்ளார்.

யால சரணாலயத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் கடமை தவறியமை மற்றும் சம்பவம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிய குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்துரையாடி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் மூவரடங்கிய குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் யால சரணாலயத்தில் முறைகேடாக நடந்து கொண்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸாரின் ஆதரவை வழங்குமாறு கோரி சந்திரா ஹேரத் இன்று (26) பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளார்.

நேற்று (25) யால சரணாலயத்திற்கு பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் வாகனங்களை பாவித்து வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தை மீறிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகளை யால சரணாலயத்தின் பாதுகாவலர் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன், இச்சம்பவத்தில் தமது கடமைப் பொறுப்புக்களைப் புறக்கணித்து சம்பவத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களித்த 07 அதிகாரிகளின் சேவையை விசாரணை முடியும் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார்.

விசாரணைகளில் சம்பந்தப்பட்ட ஏழு அதிகாரிகளுக்கு மேலதிகமாக மேலும் அதிகாரிகள் தொடர்பில் தெரியவந்தால் அவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here