பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வசந்த முதலிகேவை தடுத்து வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன் கடிதம் அனுப்பியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன், உரிய விதிமுறைகளை மீறி பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
நீதியரசர்கள் விஜித் மலல்கொட மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சட்டத்தில் வகுத்துள்ள முறைப்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், உரிய விதிகளில் திருத்தம் செய்யாமல் இந்த நடைமுறைகள் தொடரக்கூடாது என்றும் கூறியது.
மேலும் பயங்கரவாதச் செயல்களில் கைதிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை நீதிமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது