போராட்டத்தின் தாய்மார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டு களுத்துறையில் இருந்து காலி முகத்திடலுக்கு நடை பேரணியாக சென்ற இரு பெண்களை பாணந்துறை கொரகாபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெருமளவான பொலிஸார் அங்கு வந்து இந்த இரு பெண்களையும் பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதற்கு இடையூறாக இருந்ததாக மற்றொரு பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (12) காலை களுத்துறையில் இருந்து இந்த நடைபயணத்தை ஆரம்பிக்கும் போது பொலிஸாரின் இடையூறுகள் ஏற்பட்டதோடு, இடையூறுகளுக்கு மத்தியில் பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
பின்னர், வாத்துவை பிரதேசத்தில் மீண்டும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர், பாணந்துறை பகுதியில் வைத்து அவர்களை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்ற நிலையில் இருவரும் பஸ்ஸில் ஏறி பாணந்துறை கோரக்காபொல பகுதியை அடைந்துள்ளனர்.
அப்பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு பெண்களும் பொரளை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.