நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
குறிப்பாக நாட்டில் பரவலாக காணப்பட பல தொற்று நோய்களை நாம் ஒழித்துள்ளோம். எம்மால் மலேரியா, அம்மை நோய்கள் மற்றும் தொழு நோய்கள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டது.
இருப்பினும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது தொற்று நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நாம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும், இலங்கையில் காசநோய் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக நோயை அடையாளம் காண்பதற்கு தாமதம் ஏற்படுகிறது.
அதனால் தான் நோயை அகற்றுவதற்கான வாய்ப்பில்லாமல் போகிறது. இந்நிலையில் இது போன்ற நோய்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.