பொலனறுவையிலிருந்து வாழைச்சேனைக்கு கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை இன்று (24) காலை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே ஜயந்தியாய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 2 கிலோ 400 கிராம் நிறையுடைய இரு கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்ச்சியாக கேரளா கஞ்சாவினை வாழைச்சேனை பிரதேசத்திற்கு விநியோகம் செய்யும் பிரதான விநியோகத்தராகவும் செயற்பட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர் பொலன்னறுவை புதிய நகரை சேர்ந்த 42 வயதுடையவர் என்றும் இவருடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.