அனர்த்தங்களை சீர்செய்ய விசேட அமைச்சரவை பத்திரம்

303

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பாடசாலைகளின் தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் சேதங்களை சீர்செய்து பாடசாலைகளை உடன் இயக்கி மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர திட்டமிட்டுருக்கின்றோம்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையகத்தை பொறுத்தவரை பதுளை மாவட்டமே அதிகளவு சேதங்களை எதிர்நோக்கியுள்ளது. இங்கு சுமார் 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளை முழுமையாக அல்லது பகுதியளவில் இழந்து நிர்கதிக்கு ஆளாகியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் நான் தொடர்புகளை ஏற்படுத்தி, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், உலர் உணவுப் பொருட்களையும் வழங்க நடவடிக்கைகளை அந்நிலையம் ஊடாக மேற்கொண்டுள்ளேன்.

பலத்த காற்றின் காரணமாக கடுமையாக சேதங்களை எதிர்நோக்கியுள்ள வீடுகளை திருத்தி வழமை நிலைக்கு கொண்டு வர வெறும் 10 ஆயிரம் ரூபாய் பணம் போதுமானதாக இல்லை என்பது நாமறிந்த விடயம். ஆனால் அனர்த்த நிலைமையின் போது செயற்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையின் காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு 10ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை வழங்க முடியாத நிலைமை இருக்கிறது.

இந்நிலையில் குறித்த வீடுகளை முழுமையாக சீர்திருத்தம் செய்து வழமைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தேவையான நிதியைப் பெற்று அவற்றை திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. அதை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் துரிதமாக மேற்கொள்ளவதற்கு உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here