உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் அரசியல் தேவைக்காக வாக்கு கேட்கப்படுகிறதே தவிர தேர்தலின் தேவைக்காக அல்ல. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர், எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக ஏற்கனவே 8 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“..கொரோனா தொற்றுநோய் காரணமாக, உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது. தேர்தல் தள்ளிப்போகும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் அப்படியொரு சித்தாந்தத்தை நாட்டில் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.
கடந்த காலங்களில் நடந்த விடயங்கள் தாமதமானால் பழைய முறையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்.
ஐ.தே.க, ஸ்ரீலங்கா கட்சி, பொஹட்டுவ, ஜே.வி.பி உட்பட அனைவரும் ஒரே சித்தாந்தத்திற்கு வந்திருப்பது இந்த தருணத்தில் மிகப்பெரிய சாதனையாகும். தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஜே.வி.பி உட்பட சில கட்சிகள் எப்போதும் பெருமையடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. வேலை செய்யவில்லை.
அமைதியான போராட்டத்தை சிலர் அபகரித்தனர். போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சா அடிமைகளும், விபச்சாரிகளும் இருந்தார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் நிம்மதியாக வாழ்வது, தாம் பெறும் சம்பளத்திற்கு ஏற்ற பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவது போன்றவற்றைத் தவிர வேறு ஒரு போராட்டத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்த நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று பார்க்க வேண்டும். இன்று நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வரும்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கிறது. பின்னர் போராட்டம் தொடங்குகிறது. இந்த நெருக்கடியை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.