பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், இலங்கையில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து பாதுகாப்பு வைப்புத்தொகையை ஏற்க வேண்டாம் என அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், பின்னர் குறித்த கடிதத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அழைப்பின் பேரில் கடந்த 13ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக அங்கு வந்த பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கருத்து தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன.
“அதே நாளில் கடிதம் வெளியிட்டு உத்தரவை மீளப் பெற்றுள்ளார். அதற்கு சட்ட பலன் இல்லை. அமைச்சர்களின் செயலாளர்களால் இதற்கு முன்பும் இதுபோன்ற தவறுகள் நடந்துள்ளன. எனவே பாரபட்சமான முடிவு இல்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழி இல்லை என நினைக்கிறேன்.”