பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 30/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விலை ரூ. 400/-. ஆகும்.
இவ்வாறு இருக்க கட்டணத்தை அதிகரிப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
“பெட்ரோலின் விலை அதிகரிக்கும் போதோ அல்லது குறைக்கப்படும்போதோ அது முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பயணிகளும் முச்சக்கரவண்டி சாரதிகளும் கட்டணத்தில் குழப்பமடைகின்றனர். முச்சக்கர வண்டிகள் மற்றும் கட்டணங்கள் தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. நாங்கள் அத்தகைய நிலையிலும் இயங்கி வருகின்றோம் ” என்று அவர் இன்று(2) செய்தியாளர்களிடம் கூறினார்.
பயணிகளிடம் நியாயமற்ற முறையில் கட்டணம் விதிக்கப்பட்டால், அவர்கள் கட்டணத்தை நிராகரித்து முச்சக்கர வண்டியில் பயணிக்க மறுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.