பண்டிகை காலங்களில் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம்

458

பண்டிகைக் காலத்திற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இருப்புக்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தற்காலிக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற வீதிகளில் பொது போக்குவரத்தை வலுப்படுத்த 500 புதிய பேரூந்துகளை இயக்கும் திட்டத்தின் கீழ் இந்த பேரூந்துகள் நாட்டிலுள்ள அனைத்து டிப்போக்களுக்கும் விநியோகிக்கப்படும்.

அதன் கீழ், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள டிப்போக்களுக்கு பேரூந்துகளை விநியோகிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு உரையாற்றிய அமைச்சர்;

“.. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சிங்கள இந்து புத்தாண்டை வழமை போன்று கொண்டாடும் வாய்ப்பை எமது நாட்டு மக்கள் இழந்துள்ளனர்.

எனவே, பல உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சுயதொழில் செய்து வீட்டிலேயே சிறிய அளவில் உற்பத்தி செய்து வரும் தொழில்முனைவோர், தங்கள் பொருட்களை வீதியோரங்களில் இருந்து கட்டணம் ஏதுமின்றி விற்பனை செய்ய, பண்டிகை காலத்துக்கு தற்காலிக அனுமதி வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, வீதி இருப்பு தொடர்பாக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில், அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையுடன், நிரந்தர கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க தற்காலிகமாக இந்த அனுமதியைப் பெறுகின்றனர்.

தற்போது மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆடைகள் விற்பனைக்காக இவ்வாறான விசேட இடங்களை ஒதுக்கியுள்ளோம்.

அதேபோன்று, நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை, தற்காலிகமாக சுயதொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்..”

இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துகோரள, வஜிர அபேவர்தன, உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here