நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுகயீன விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த தொழில்சார் நடவடிக்கையினால் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாது என நீர் வழங்கல் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, நீர் விநியோகம் தடைபடலாம் எனவும், இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“.. ஏப்ரல் 4 முதல் நாங்கள் தொடர்ச்சியான தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் நீரேற்று நிலையங்களின் செயல்பாடுகளை மட்டுமே நடத்தி வருகிறோம். இருப்பினும், பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல்கள் இல்லை. அதன்படி, குறிப்பிட்ட சில இடங்களில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. சுகயீன விடுப்பு இல்லாமல் பணிபுரிந்த நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நியாயமான கோரிக்கையாகும்..”