சீனாவின் யுனான் மாகாணத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராய்வதாக யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (17) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது வர்த்தகம், சுற்றுலா, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மேம்பாடுகளுக்கு உதவுவதற்கு அவர் பிரதமரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
50 மில்லியன் மக்கள் தொகை மற்றும் 417 பில்லியன் தேசிய உற்பத்தியை கொண்டுள்ள யுனான் மாகாணம் இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு உதவும் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தை பார்வையிட்ட அவர் கண்டி, பொலன்னறுவை மாவட்டங்களுக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது 25 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களையும் பல்வேறு பாடசாலைகளுக்கும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.