சர்ச்சைக்குரிய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இன்று (19) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, உலக சுகாதார அமைப்புடன் இணைந்த ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.