இரண்டு ஏற்றுமதி சார்ந்த வாழைத் திட்டங்கள்

676

எம்பிலிப்பிட்டிய மற்றும் செவனகல ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இரண்டு புளிப்பு வாழை மற்றும் கேவன்டிஷ் வாழை செய்கை திட்டங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் புளிப்பு வாழை மற்றும் கேவன்டிஷ் வாழை ஆகிய இரண்டு ஏற்றுமதி பயிர்ச்செய்கை திட்டங்களை நிர்மாணிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (26) காலை அகுனகொலபலஸ்ஸ சேவைப் பயிற்சி நிறுவனத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி மாலதி பரசுராமன், விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்பிலிபிட்டிய புளிப்பு வாழைத்திட்டம் 400 ஏக்கரில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் செவனகல கேவன்டிஷ் திட்டமும் 400 ஏக்கரில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேலும், 150 மில்லியன் ரூபா செலவில் பரவகும்புக்க பிரதேசத்தில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளது.

இந்த இரண்டு வாழை திட்டங்களிலும், 800 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேளாண்மை துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் புதிய தொழில்நுட்பம், ஆலோசனைகள் மற்றும் நிதி வசதிகள் வழங்கப்படும்.

இந்த இரண்டு திட்டங்களின் பணிகளை ஜூன் மாத இறுதிக்குள் ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 06 கிராமங்களை இளைஞர் விவசாய தொழில்முயற்சி கிராமங்களாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here