அரசாங்கத்தின் பணத்தை செலவு செய்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 23 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 11 திட்டங்கள் நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது.
பணப்பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் தவிர, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒத்துழைப்போ அல்லது ஒப்பந்தமோ இல்லாமை சில திட்டங்கள் நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் என்றும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட திட்டங்களைப் பரிசீலித்து அவற்றை மீளவும் ஆரம்பிப்பதற்கான உத்திகள் அல்லது பின்பற்றக் கூடிய நடைமுறைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூடியிருந்தது.
இதற்கமைய தற்பொழுது நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களுக்காக 56,388 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2,531 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும், 1423 மில்லியன் ரூபாவுக்கான கொடுப்பனவுகள் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், திட்டங்களின் வேலைகளைப் பூர்த்தி செய்ய மேலும் 56,999 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் இங்கு புலப்பட்டது. இந்தத் திட்டங்களில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் போல பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் தீர்க்கமுடியாத காரணங்களால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் அடங்கும். நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.
நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினைகளால் தடைப்பட்ட 11 திட்டங்களில், கொட்டாவ முதல் மாஹேனவத்தை வரையிலான புதிய நுழைவு வீதி நிர்மாணம், அலவ்வ நகர அபிவிருத்தி (சாலைகளை விரிவுபடுத்துதல்), கம்பஹா நெடுஞ்சாலையில் இருந்து யக்கல வரையிலான நுழைவாயில் நிர்மாணம், இம்மதுவ நகர விரிவாக்கம், பேருவானாவத்தை, எஹெலியகொடவில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான வீடுகளை அமைக்கும் திட்டம், ஹட்டன் புகையிரத அபிவிருத்தி மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையை மறுசீரமைப்பது போன்ற திட்டங்கள் குறித்து குழு பரிசீலனை செய்தது.