பிரதேச மட்டத்தில், மாவட்ட மட்டத்தில், மாகாண மட்டத்தில் மற்றும் தேசிய மட்டத்தில் காணப்படும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை யொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் 2019/2020/2021 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயலாற்றுகை தொடர்பில் ஆராயும் நோக்கில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் அடையாளம் காண்பதற்குத் தகவல் கட்டமைப்பொன்றைப் பேணுவது மிகவும் முக்கியமானது எனவும் இதனால் இது பற்றிய தகவல்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை பாடசாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு தகவல் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
எனவே, இது தொடர்பில் கல்வி அமைச்சு வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது அவசியமானது என்றும், பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் தொடர்பில் விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்றும் கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.