அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
கூரகல யாத்திரையிலிருந்து வீடு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆணும் அம்பன்பொல வைத்தியசாலையிலும், மேலும் 18 பெண்களும் நான்கு ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டாலேய பாலத்தில் இருந்து தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று ஓடைக்குள் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கதுருவெலயில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த இந்த பேருந்து, கொட்டாலியா ஓயாவில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, புடலுஓயா துனுகெதெனிய – மடகும்புர வீதியின் வளைவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
தலவாக்கலை பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை மற்றும் மல்தெனிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புடலுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.