ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கென்யாவின் நைரோபி உட்பட அங்குள்ள முக்கியமான நகரங்களில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.
சில இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இதுவரை 06 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மக்கள் போராட்டங்களை அடக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகின்ற காரணத்தால் இராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமிடையில் பாரிய மோதல்கள் உருவாகியுள்ளன.
வணிக நிறுவனங்களுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த 06 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக நைரோபி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் அரசாங்கம் மற்றும் அண்மைய வரி உயர்வுகள் மற்றும் வாழக்கைச் செலவு அதிகரித்தமைக்கு எதிராக நாடளாவிய போராட்டங்களை நடத்த வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடிங்கா அறைகூவல் விடுத்திருந்தார். அதன் விளைவாகவே இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
எரிபொருள் வரியை இரட்டிப்பாக்குதல் மற்றும் இதர அரசாங்க வருமானங்களை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தற்போதைய அரசாங்கம் கூறுகின்றது.
ஏற்கனவே உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் போராடி வரும் கென்யா மக்களுக்கு இந்த வரி அதிகரிப்புகள் மேலும் சுமையை அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.