இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை திருத்தும் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று (17) பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு அழைக்குமாறும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபையின் அண்மைய தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, உரிய கட்டணத்தை திருத்தியமைக்கும் தீர்மானத்தின் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், கட்டண முறையை செல்லாததாக்கும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.