லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடி ரூபா திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார்.
எரிவாயு விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் சிறிய இலாபத்தின் ஒரு பகுதியை, நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, இலாபத்தின் உரிமையாளரான அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு இறுதி நிவாரணம் கிடைக்கும் என நம்புவதாகவும் முதித பீரிஸ் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாகவே இந்த பெருந்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்த முதித பீரிஸ், இந்த பணத்தை அரசாங்கம் நிவாரணத் திட்டத்துக்கோ, அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்கோ அல்லது வேறு எதற்கோ பயன்படுத்தினாலும், அதன் உண்மையான உரிமையாளர்களான மக்களுக்கே பணம் திரும்பக் கிடைக்கும் என்றார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று (20) விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய போது அதன் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.