அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்து விவாதிப்பதற்கு முன்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்தி, மக்களின் கருத்துக்கு இடம் கொடுத்த பின்னரே திருத்தத்தின் கீழ் உள்ள விடயங்கள் குறித்து விவாதிக்க முடியும் என சுமந்திரன் சுட்டிக்காட்டிய போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழப்பமடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் இன்று (08) காலை ‘சிரச பெதிகட’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜுலை 26ஆம் திகதி ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட சர்வகட்சி உச்சி மாநாடு என அரசாங்கம் பெயரிட்ட கலந்துரையாடலின் போது ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி நேர்மையானவராக இருந்தால் மாகாண சபை சட்டத்தில் சிறு திருத்தம் செய்து தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இக்கலந்துரையாடலில், முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான பிரச்சினைகளை விட, அரச நிர்வாகத்தில் முஸ்லிம் மாவட்டச் செயலாளரை நியமிக்க முடியாத பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.