அரசாங்கத்தின் அனைத்தையும் எதிர்ப்பதே எதிர்க்கட்சியின் பணி என நினைப்பதை நிறுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விசேட அறிக்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பதின்மூன்றாவது திருத்தம் நாட்டுக்கு ஏற்றவாறு அமுல்படுத்தப்பட வேண்டும். அனைவரும் ஆழ்ந்த மத்தியஸ்த மனதுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே இது செய்யப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைக்கத் தயங்குவதைக் காண முடிந்தது. இனி இந்த நிலையை மாற்றுவோம்.
அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறினால்தான் நம் நாடு முன்னேற முடியும். கடந்த காலத்தை பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து பொதுவான தீர்மானத்தை எடுப்போம்..” என ஜனாதிபதி தெரிவித்தார்.