புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இலங்கை எடுக்கக்கூடிய பசுமை நிதி வசதிகள் மற்றும் மின்சார கட்டணங்களுக்கு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானியம் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே ஃபிராஞ்சேவுடன் (Marc-andre Franche) கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மார்க் ஆன்ட்ரே ஃபிராஞ்சே அவர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(18) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், மின்துறையின் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான மாதிரி மற்றும் மறுசீரமைப்பு திட்டத்திற்கு வளர்ச்சி முகமைகள் அளித்த ஆதரவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.