உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது குறித்தான சந்தேகம் நிலவுவதும் ஷானி அபயசேகரவின் இடமாற்றம் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நவம்பர் 18 அன்று ஜனாதிபதியாகிறார். நவம்பர் 22 அன்று பிரதமர் நியமிக்கப்படுகிறார். ஆனால் அதற்கெல்லாம் முதலாக, அதாவது ஜனாதிபதி, பிரதமர் நியமிப்புகளுக்கு முன்னரே ஷானி அபயசேகரவை இடமாற்றுகிறார். அமைச்சரவை நியமிப்பிற்கு முன்னர் பிரதமர் நியமிப்பிற்கு முன்னர் ஷானியை மாற்றுகிறார்கள்.
நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய 31 பேரை கோட்டாபய ராஜபக்ஷவின் பரிந்துரையில் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இது பொய்யல்ல, உண்மை. சிஐடி அதிகாரிகள் 700 பேருக்கு வெளிநாடு செல்வதை தடை செய்தார். நான் இவற்றினை சபைக்கு வழங்குகிறேன்.
இது பாரிய சந்தேகத்திற்குரியது.. ஏன் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி இவ்வாறு செய்தார்? நாங்கள் அது பற்றி அறிய வேண்டும். இதற்குப் பின்னால் உள்ள உண்மைகளை நாம் தெரிந்திருக்க வேண்டும்.
நான் அப்பட்டமான பொய்களை கூறினால் அதற்கு எதிராக விசாரணைகளை நடத்துங்கள். நான் பயமில்லை. விசாரியுங்கள். 69 இலட்சத்தில் ஒருவன் என்று பீய்த்துக் கொண்டு அவர்களை ஏமாற்றி கைகளில் இரத்தக் கரைகளை படிந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை காப்பாற்ற ஏன் துடிக்கிறீர்கள் எனக் கோருகிறேன். நான் கூறுவது விசாரியுங்கள். வாயை மூடவும்..”
மேலும், ஷானி அபயசேகர போன்ற நேர்மையான அதிகாரிக்கு எதிராக பழிவாங்கவே பொய்யான வழக்குகளை அவர் மீது திணித்ததாகவும் எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.