பூமியை விட்டுப் பிரியும் நிலா?

432

நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த உண்மை சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது.

இதற்கு என்ன காரணம்? பூமியை விட்டு நிலா விலகிச் செல்வதால் என்ன ஆபத்து?

பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சென்று தரையிறங்கியது.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்தார்கள். இப்படியான பயணங்களின்போது ரெட்ரோ ரிஃப்ளக்டர் (Retroreflector) என்றழைக்கப்படும் ஒரு கண்ணாடிப் பொருளை அங்கு பொருத்தினார்கள். அதன் மூலமாக நிலாவுக்கும் பூமிக்குமான தொலைவை விஞ்ஞானிகள் அளந்தார்கள்.

கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11 1970இல் லூனா 17, 1971 அப்பல்லோ 14, 15, 1973இல் லூனா 21. இப்படியாக நிலவுக்குச் சென்ற ஐந்து விண்கலங்களும் நிலாவின் தரைப்பரப்பில் கண்ணாடி போன்ற அந்த லேசர் பிரதிபலிப்பான் கருவியை நிலவில் அமைத்தார்கள்.

நிலா பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. ஆகவே இரண்டுக்கும் இடையிலான தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.

அதன்படி, அதிகபட்ச தொலைவில் இருக்கும்போது இரண்டுக்கும் இடையே 406,731 கி.மீ தூரம் இருக்கும். குறைந்தபட்சம் தொலைவில், இரண்டுக்கும் இடையே 364,397 கி.மீ தூரம் இருக்கும். இரண்டுக்கும் இடையிலான சராசரி தொலைவு 384,748 கி.மீ.

மேலே பார்த்த லேசர் ஒளிக்கற்றையை தினமும் நிலவுக்கு அனுப்பி, தொலைவைக் கணக்கிட்டுக் கொண்டே வந்தால், நிலா, பூமிக்கு இடையிலான தொலைவு குறித்த தினசரி தரவுகள் கிடைக்கும்.

பல ஆண்டுகள் இதுபோல் தரவுகளைச் சேகரித்து, அதன் சராசரியைக் கணக்கிட்டால், பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு மாறி வருகிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன்படி இரண்டுக்கும் இடையிலுள்ள தூரம் மாறிக்கொண்டு வருவதாகத் தற்போது உறுதி செய்துள்ளனர்.

இப்படியாகப் பல தரவுகளை வைத்து ஆய்வு செய்தபோது, 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் சுழற்சி வேகம் வெறும் 8 மணிநேரம் மட்டுமே, அதாவது ஒரு நாளின் நீளம் வெறும் 8 மணிநேரம் மட்டுமே எனத் தெரிய வந்தது.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவான தொடக்கத்தில் நெருப்புக் குழம்பு போன்ற தோற்றத்தில் இருந்தது. அப்போதுதான் செவ்வாய் கிரகத்தின் வடிவத்தை ஒத்த ஒரு பெரும் கோள் போன்ற வான்பொருள் பூமியின் மீது வந்து மோதியது.

அந்த மோதலின்போது ஏற்பட்ட வெடிப்பில்தான் இப்போதைய நிலாவும் பூமியின் உருவானது. இப்படியாக நிலா உருவான பிறகுதான் பூமியின் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து, நாம் இப்போது பார்க்கும் 24 மணிநேரம் என்ற அளவை எட்டியது.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள வெறும் 8 மணிநேரமே எடுத்துக்கொண்டிருந்த நிலையில், நிலா உருவான பிறகு அந்த அவகாசம் மாறத் தொடங்கியது.

நிலாவின் ஈர்ப்பு விசையால், பூமியின் சுழற்சி வேகத்தில் பிரேக் போல ஒரு தடை இயக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக புவியின் வேகம் மெல்லக் குறைந்துகொண்டே வந்தது. அதனால், சுமார் 85 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 21 மணிநேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் நிலையை அடைந்தது. இதற்கான தொல்படிம ஆதாரங்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

அதேபோல, 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த தொல்படிம ஆதாரங்களின்படி, அப்போது பூமி 22 மணிநேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொண்டது.

சுமார் 5,000 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 50 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது இப்போதைய நேரக்கணக்குப்படி, 25 நாட்கள் பகல், 25 நாட்கள் இரவு என்ற நிலையை பூமி எட்டிவிடும்.

ஆனால், இப்படியொரு நிலை வருமா என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். அதையேதான் விஞ்ஞானிகளும் சிந்திக்கிறார்கள்.

ஏனெனில், சூரியன் அதற்குள்ளாகவே சிவப்பு ராட்சன் எனச் சொல்லப்படும் ஒரு பிரமாண்ட நிலையை எட்டிவிடும். சூரியனின் அளவு மிகப் பெரிதாகி, புதன், வெள்ளி ஆகிய கோள்களை நிச்சயமாக விழுங்கிவிடும்.

அதற்கு அடுத்து, பூமியை விழுங்குமா விழுங்காதா என்பது இதுவரை உறுதியாகத் தெரியாது. அப்படிப்பட்ட ஓர் எதிர்காலம்தான், பூமிக்கும் நிலாவுக்கும் காத்திருக்கிறது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here